
கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் நேற்றிரவு நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், ஜாலான் துன் ரசாக் சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் சிங்கப்பூர் தூதரகத்திற்கு அருகில் இரவு சுமார் 10.20 மணியளவில் நிகழ்ந்தது.
2 வாகனங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்ததில், மொத்தம் 8 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் முதல் காரின் 43 வயது ஓட்டுநர், கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு வாகனத்தில் பயணம் செய்த 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்ற ஊழியர்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டு, நள்ளிரவு 12 மணியளவில் சாலைப் போக்குவரத்தை சீரமைத்தனர்.



