Latestமலேசியா

ஜோகூர், இரவு கேளிக்கை விடுதியில் சக பணியாளர் கொலை; 4 ஆடவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, பிப்ரவரி 14 – ஜோகூர் பாரு, ஜாலான் டத்தோ அப்துல்லா தாயிரிலுள்ள, இரவு கேளிக்கை மையத்தில், சக பணியாளரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களுக்கு எதிராக இன்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், 28 வயது போ கியன் ஹுவட், 31 வயது முஹமட் அசிக் ஒத்மான், 48 வயது வொங் சியு ஹவ், 32 வயது லிம் வி ஹுவாங் ஆகிய அந்நால்வரிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

இம்மாதம் நான்காம் தேதி, அதிகாலை மணி 2.30-க்கும் காலை மணி 11.30-க்கும் இடைப்பட்ட நேரத்தில், வேண்டுமென்றே மரணம் விளைவிக்கும் நோக்கத்தில் 24 வயது ஹா சுன் பாயை அவர்கள் கொலைச் செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இவ்வழக்கு விசாரணை மே 23-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

இவ்வேளையில், அதே நாள், தாமான் சூத்ரா உத்தாமாவிலுள்ள, மற்றொரு இரவு கேளிக்கை மையத்தில், போ இதர இரு ஆடவர்களுடன் இணைந்து, ஹா சுன் பாயை சட்டவிரோதமாக அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஓராண்டு சிறை அல்லது ஈராயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இதர இரு ஆடவர்களையும் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க இன்று மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கிய வேளை ; போ கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதால், அவனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!