ஜோகூர் பாரு, மார்ச் 6 – ஜொகூர், தாமான் பெர்மாஸ் ஜெயாவிற்கு அருகில், பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில், நான்கு வாகனங்களை உட்படுத்திய கோர விபத்தில், முதியவர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு மணி 11.41 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததை, ஜோகூர் ஜெயா தீயணைப்பு மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவு கமாண்டோ எம்.கே.ஹரிதாஸ் தெரிவித்தார்.
டிரெய்லர், புரோடுவா மைவி கார், புரோடுவா அஸ்லா வாகனம் மற்றும் ஹோண்டா சிவிக் என நான்கு வாகனங்களை அவ்விபத்து உட்படுத்தி இருந்தது.
விபத்துக்குள்ளான அல்ஸா வாகனம் மற்றும் ஹோண்டா சிவிக் காரில் சிக்கிக் கொண்டிருந்த மூவரை தீயணைப்பு வீரர்கள் மீட்ட வேளை ; அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்த மூவரும், 45 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
எனினும், 40 வயது மதிக்கத்தக்க மைவி ஓட்டுனரும், 28 வயது டிரெய்லர் ஓட்டுனரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரவுப் செலாமாட் தெரிவித்தார்.