கோலாலம்பூர், டிச 24 – ஜோகூர் மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக போலீஸ் கமிஷனர் குமார் முத்துவேலு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
ஜோகூர் போலீஸ் துணைத் தலைவராக இருந்த குமார் ஜனவரி 23ஆம் தேதி முதல் ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் . இதனிடையே குமாரின் நியமனத்திற்கு பலர் சமூக வலைத்தலங்களிலும் நேரடியாகவும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். பினாங்கு மாநிலத்தின் முன்னாள் போலீஸ் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம் போலீஸ் கமிஷனர் குமாருக்கு தமது பாராட்டையும் வாழத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
2003ஆம் ஆண்டு செந்தூல் மாவட்ட போலீசில் இன்ஸ்பெக்டராக குமார் பணியாற்றியபோது தாம் செந்தூல் மாவாட்ட போலீஸ் தலைவராக உதவி போலீஸ் கமிஷனர் என்ற நிலையில் தாம் பணியாற்றியதையும் தெய்வீகன் நினைவுகூர்ந்தார்.
ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக குமார் நியமிக்கப்பட்டதன் மூலம் அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மடானி அரசாங்கம் உட்பட சமூகத்தின் நம்பிக்கையை அவர் பெற்றுள்ளார் . இது குறித்து நாமும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். போலீஸ் படையில் இத்தகைய பதவி உயர்வும் நியமனங்களும் எதிர்காலத்தில் இந்தியர்களுக்கு மேலும் கிடைக்கும் என்றும் தெய்வீகன் நம்பிக்கை தெரிவித்தார்.