ஜோகூர் பாரு, பிப்ரவரி 22 – ஜோகூர் பாரு, கோத்தா திங்கியிலுள்ள, உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பான “மெனுவில்”, ஒரு “கப்” சூடான பானத்தின் விலை 15 ரிங்கிட் 90 சென் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது குறித்து எழுந்திருக்கும் புகாரை உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சு விசாரிக்கும்.
அதனால், டெசாருவிலுள்ள சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளருக்கு, விளக்கம் கோரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, மாநில உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சின் இயக்குனர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர், டெசாருவிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றின் உணவகத்தில், தாம் ஆர்டர் செய்த ஒரு கப் சூடான பானத்திற்கு அதிக விலை வசூலிக்கப்பட்டதை கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பகிர்ந்த கட்டண ரசீது மூலம், ஒரு கப் சூடான பானத்திற்கு 15 ரிங்கிட் 90 சென்னும், ஒரு “முட்டை ரொட்டி சனாய்க்கு” 12 ரிங்கிட் 90 சென்னும், ஒரு தோசைக்கு 10 ரிங்கிட் 90 சென்னும் விதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்த அதிகப்படியான விலை பட்டியல் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாருக்கு விளக்கம் கோரும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.