
கோலாலம்பூர், ஜூலை.30- கோலாலம்பூர், Taman Melawatiயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது காரின் பின்பக்கப் பெட்டியைத் (boot) திறக்க முயன்றதால் பெண் ஒருவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். தமது மகனை இசை வகுப்பிற்கு அனுப்பி விட்டுக் காருக்குத் திரும்பிய போது அச்சம்பவம் நிகழ்ந்தாக அப்பெண், ‘Threads’ தளத்தில் தமது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
மகன்தான் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக bootட்டைத் திறந்திருப்பதாக அப்பெண் தொடக்கத்தில் நினைத்துள்ளார். இருப்பினும், தமக்கு அறிமுகமில்லாத நபர் அவ்வாறு செய்ய முயன்றதை அவர் பின்னர் உணர்ந்துள்ளார்.
வெளிநாட்டைச் சேர்ந்த அந்நபரிடம் என்ன செய்கிறார் எனக் கேட்டதாகவும் ஆனால் அவருக்கு மலாய்மொழி புரியவில்லை என்பது தெரிய வந்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டார். உடனே அருகிலிருந்த மற்றொருவர் அந்த நபரை விரட்டியடித்ததோடு, காரின் bootட்டை மூடியது தமக்கு பெரும் நிம்மதி அளித்ததாக அப்பெண் விவரித்தார்.
இவ்வேளையில் அப்பதிவு குறித்து சமூக ஊடகப் பயனர்கள் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். வாகனமோட்டிகள் குறிப்பாகப் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும், காருக்குள் இருக்கும் போது கதவுகளைப் பூட்டி வைப்பது நல்லது, கூடுதல் பாதுகாப்புக்காக நிறம் பூசப்பட்ட ஜன்னல்களைப் பயன்படுத்தலாம் என அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
அப்பெண் நிதானமாகச் செயல்பட்டதைப் பாராட்டிய இணையவாசி ஒருவர், அத்தகையச் சூழ்நிலைகளில் அந்நியர்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டாம் என்றும், கார் ஹாரனைப் பயன்படுத்தி உதவிக்காகக் காத்திருக்குமாறும் பரிந்துரைத்துள்ளார்.



