செராஸ், மார்ச் 22 – தலைநகர், செராஸ், பண்டார் துன் ஹுசைன் ஓனில், துப்பாக்கியை காட்டி மிரட்டப்பட்டதால், கார் இழுவை தொழிலாளர் பீதியில் உரைந்தார்.
அச்சம்பவம் தொடர்பில், நேற்று நண்பகல் மணி 12.48 வாக்கில், சம்பந்தப்பட்ட தொழிலாளர் போலீஸ் புகார் செய்ததை காஜாங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் சாயிட் ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை, காலை மணி 10.55 வாக்கில், சம்பந்தப்பட்ட தொழிலாளரும் அவரது நண்பரும், கடன் தொகை திரும்ப செலுத்தத் தவறிய பெண் ஒருவரின் காறை பறிமுதல் செய்ய சென்ற போது அவர் அந்த பதற்றமான தருணத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
அப்பொழுது அங்கு வந்த அப்பெண்ணின் தந்தை என கூறிக் கொண்ட ஆடவன் ஒருவன், கார் கடனை திரும்ப செலுத்தவில்லை என்பதை மறுத்ததோடு, சம்பந்தபட்ட தொழிலாளரை துப்பாக்கியை காட்டி விரட்டியுள்ளான்.
அதனால், அச்சமடைந்த அந்த தொழிலாளர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறியதோடு, போலீஸ் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, துப்பாக்கி காட்டி மிரட்டிய 60 வயது ஆடவரிடமிருந்து போலீஸ் வாக்குமூலத்தை பதிவுச் செய்துள்ளது. அதோடு அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த துப்பாக்கியை வைத்திருக்க அவர் முறையான அனுமதியை பெற்றிருப்பதோடு, ஆவணம் எதுவும் இன்றி காரை இழுத்துச் செல்ல வந்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.