
சிரம்பான், செப்டம்பர்-9,நெகிரி செம்பிலான் மாநில சமஸ்தானாதிபதி துவாங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவிர் அவர்களை அரியணையிலிருந்து இறக்கத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி முயல்வதாக வெளியான செய்தி அறிக்கையை, மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
சிங்கப்பூரின் The Straits Times நாளிதழில் வெளியான அறிக்கையை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மந்திரி பெசார், இந்த குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றார்.
மலாய் ஆட்சியாளர்களின் மாண்பையும், நாட்டின் அரசியலமைப்பு முடியாட்சி கொள்கையையும் அம்னோ எப்போதும் போற்றிப் பாதுகாத்து வருவதாக அவர் சொன்னார்.
அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்காகவும், மாநிலத்தின் பாரம்பரிய வழக்கங்களில் தலையிடுவதற்காகவும் அம்னோவின் உயர் மட்டத் தலைவர்கள் இரகசியமாகச் செயல்பட்டதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், உண்மையில் மாநிலத்தின் அமைதி, ஒற்றுமை மற்றும் மக்களின் நலனை உறுதிச் செய்யும் வகையில், நெகிரி செம்பிலான் பாரம்பரிய வழக்கங்கள் தொடர்பான இந்த விவகாரம் சட்டப்படியும், அமைதியான முறையிலும் சுமுகமாகத் தீர்க்கப்படும் என தாம் நம்புவதாக இஸ்மாயில் தெரிவித்தார்.



