தெமர்லோ, ஏப்ரல் 19 – பஹாங், தெமர்லோ, ரும்பூன் மக்மூர் – கம்போங் குனுங் சென்யூம் பைபாஸ் அருகே, குப்பை கொட்டும் இடத்தில், டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், கோதுமை பாக்கெட்டுகள், சாடின் டின்கள் வீசப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நேற்று மாலை முதல் வைரலாகி வருகின்றன.
அந்த சாலை வழியாகச் சென்ற, முகநூல் மற்றும் டிக்டொக் சமூக ஊடக பயனர்களால் அந்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அந்த புகைப்படங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு எரியூட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
வெகு காலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் காலாவதியானதால், அவை தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனினும், இதுவரை யாரும் அந்தக் குற்றச்சாட்டை ஏற்கவோ, மறுக்கவோ முன்வரவில்லை.