குவாலா லங்காட், மார்ச் 22 – சிலாங்கூர், பந்திங், தெலுக் பங்கிலிமா காராங்கில், பெறாமை காரணமாக தனது காதலனை கொலைச் செய்த பெண் ஒருவருக்கு எதிராக இன்று தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 26 வயது எ.தமிழ்ச்செல்வி எனும் அப்பெண்ணிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
இம்மாதம் 11-ஆம் தேதி, அதிகாலை மணி 5.30 வாக்கில், தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள வீடொன்றில், 26 வயது வி.கெளசிகன் எனும் நபரை கொலை செய்ததாக, முன்னாள் மருத்துவ மாணவரும், பகுதி நேர மாடலுமான அப்பெண் குற்றத்தை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
எனினும், இன்றைய் வழக்கு விசாரணையின் போது, தமிழ்ச்செல்வி மனநலம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மனநல சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென, அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
அதோடு, அவர் இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், அதனை நிரூபிக்க தேவையான ஆவணம் எதுவும் இன்து முன் வைக்கப்படாததால், அடுத்த வழக்கு விசாரணையின் போது அவற்றை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 25-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, இம்மாதம் 11-ஆம் தேதி, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த தனது காதலனை, பெண் ஒருவர் குத்தி கொலை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கத்தி குத்துக்கு இலக்கான ஆடவன் உடனடியாக சைபர்ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்ட போது, பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மருத்துவமனை வளாகத்திலிருந்து சம்பந்தப்பட்ட பெண் கைதுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.