கோலாலம்பூர், பிப் 17 – திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் மோசடி தொடர்பில் தைவான் போலீசாரால் தேடப்பட்டு வந்த நான்கு ஆடவர்கள் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 30 ஆம் தேதி கோலாலம்பூரில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உள்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைத் துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசுப் தெரிவித்தார்.
நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தைவான் போலீசார் இது குறித்த தகவல்களை தங்களுக்கு தெரிவித்ததாக ரம்லி கூறினார். 31 மற்றும் 44 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் மலேசியாவை தளமாகக் கொண்டு மோசடி அழைப்பு மையத்தை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 12 கைதொலைபேசிகள், பல்வேறு ஆவணங்கள் , மூன்று கடப்பிதழ்கள் மற்றும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நான்கு தைவான் ஆடவர்கள் மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரம்லி கூறினார்.