புத்ராஜெயா, மார்ச் 17 – ஒரு வகை நச்சுப்பொருளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், Slymchoco அல்லது Slymochoco வகை சாக்லெட் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
Sibutramine எனும் அட்டவணையிடப்பட்ட அந்த ரசாயணக் கலவை, பசியை அடக்க அல்லது சாப்பிடும் எண்ணமே வராதிருக்க உதவுவதாகக் கூறி விற்கப்படுகிறது.
அதை பெரும்பாலும் உடல் இளைக்க விரும்புவோர் பரவலாக உட்கொள்கின்றனர்.
Sibutramine கொண்டு வரும் மோசமான பக்க விளைவுகளில், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவையும் அடங்கும் என அமைச்சு கூறியது.
இருதய செயல்பாட்டையும் அது பாதிக்கக் கூடும்; அதாவது ஓய்வாக இருக்கும் போது கூட இருதயத் துடிப்பை அது அதிகப்படுத்தும்.
அதோடு, வாய் காய்ந்து போவது, குமட்டல், மலச்சிக்கல், தூக்கப் பிரச்னை, தலைச்சுற்றல் போன்ற உபாதைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே, இணையத்தில் விற்பவர்கள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும், இன்னமும் அந்த சாக்லெட் Stok-கை வைத்திருந்தால், உடனடியாக அவற்றின் விற்பனையை நிறுத்த வேண்டும்; அவற்றை சீல் வைக்கும் நடவடிக்கைக்கு அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அது தொடர்பான அனைத்து மின்னியல் விளம்பரங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என KKM கூறியது.
அந்த சாக்லெட்டை தற்சமயம் பயன்படுத்தி வரும் பொது மக்களும், அதனை உட்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்; மருத்துவர்களை நாடி உரிய ஆலோசணையையும் சிகிச்சையையும் பெறுமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உணவுப் பொருட்களை வாங்கும் போது, அவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை ஒரு முறைக்கு இரு முறை பரிசோதித்துக் கொள்வது முக்கியம் என அமைச்சு நினைவூட்டியது.