கோலாலம்பூர், நவ 6 – வெளியுறவு அமைச்சர் டாக்டர் சம்ரி அப்துல் காதிர் நடப்பு இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கருடன் பேச்சு நடத்தவிருக்கிறார்.
பணி நிமித்த வருகையாக சம்ரி இன்று இந்தியாவுக்கு இரண்டு நாள் வருகை மேற்கொள்ளவிருக்கிறார். நாளை நடைபெறவிருக்கும் மலேசிய – இந்திய கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கு சம்ரி தலைமையேற்பார். அந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரும் கலந்துகொள்வார்.
மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டம் இதுவாகும். ஆகக்கடைசியாக அந்த கூட்டம் 2011-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றது. அதோடு இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் தொடர்பான அனைத்துலக மற்றும் வட்டார விவகாரங்கள் குறித்தும் சம்ரியும், ஜெயசங்கரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள்.
பொருளாதாரம், தற்காப்பு, எரிபொருள், சுகாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் மலேசியா பேச்சுநடத்தும் என வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.