தம்பின், ஜனவரி 9 – நெகிரி செம்பிலான், தம்பினில் நிகழ்ந்த சண்டை தொடர்பில், போலீஸ் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என கூறப்படும் குற்றச்சாட்டு, தவறான நோக்கம் கொண்டது.
டெலிகிராம் எடிசி சியசாட் (Telegram Edisi Siasat) வாயிலாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை.
தம்பின் போலீஸ் தலைமையகம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் அதுவென, தம்பின் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அனுவால் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
புகார் கிடைத்ததும், போலீசார் விசாரணையை தொடங்கினர்.
எனினும், அந்த சண்டைக்கு, மது போதையில் இருந்த புகார் அளித்த நபர் தான் காரணம் என்பது தெரிய வந்தது.
உறவுக்காரர்களான அவ்விரு தரப்பினரும் கலந்து பேசியதில், அவ்விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என ஒப்புக் கொண்டனர். மேலும், அச்சம்பவம் குறித்து, புகார் அளித்தவருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என அன்வால் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
சண்டைக்கு காரணமானவர் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கோரியதை அடுத்து, அவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.
அதனால், கடந்தாண்டு ஆகஸ்ட்டு 23-ஆம் தேதி செய்யப்பட்ட அந்த புகார், “மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் இல்லை” என வகைப்படுத்தப்பட்டதாக அனுவால் தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பவோ, பகிரவோ வேண்டாம் என அனுவால் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.