தாய்லாந்து, பிப் 29 – தாய்லாந்தின் ஏர் ஏசியா விமானத்தில் பயணி ஒருவரின் பவர் பேங் வெடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் பயணி ஒருவர் இருக்கையின் அடியில் வைத்திருந்த பவர் பேங் திடீரென வெடித்துள்ளது. அதிக அழுத்தமும் அதனின் தரமும் தான் அது வெடிப்பதற்கு காரணமாக இருக்கும் என தாய்லாந்து விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அந்த வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட நெருப்பை ஏர் ஏசியா பணியாளர் ஒருவர் தீயணைப்பு கருவியின் மூலம் இரண்டு நிமிடங்களில் அணைத்துள்ளார்.
அந்த பணியாளரின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அனைவரும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.
பிப்ரவரி 24 ஆம் தேதி நடந்த சம்பவத்தை 186 பயணிகள் உட்பட அந்நாட்டின் தொழில்துறை அமைச்சரும் கண்கூடாகப் பார்த்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து யாரையும் குறை கூற முடியாது எனவும் இனி தரமான பவர் பேங் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அந்த விமான நிலையத்தின் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.