கோலாலம்பூர், நவ 3 – கூட்டரசு அரசாங்கத்தின் நிர்வாகத்தை பெரிக்காத்தான் நேசனல் எடுத்துக்கொள்ள வேண்டுமென மலேசியர்களில் பெரும்பாலோர் விரும்புகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்திருக்கிறார். தங்களை பாதிக்கக்கூடிய விவகாரங்களுக்கு தீர்வு காண்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தவறிவிட்டதாக பலர் எங்களிடம் குறைகூறி வருவதாக பெரிக்காத்தான் நேசனல் தலைமைச் செயலாளருமான ஹம்சா கூறினார்.
அரசாங்கத்தை எடுத்துக் கொள்வது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் நாங்கள் எப்போது அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் . அந்த பதிவுகளை நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். அதோடு நடப்பு அரசாங்கம் தற்போது உட்கட்சி நெருக்கடியினால் குழப்பத்தில் இருப்பதாகவும் ஹம்சா தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடைபெறும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வை நடத்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்டு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் கூறியிருந்தார். ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்களே இதனை எதிர்ப்தையும் இப்போது பார்க்க முடிவதாக ஹம்சா சுட்டிக்காட்டினார்.