கோலாலம்பூர், ஜூலை 1 – கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தின் முதலாவது முனையத்திலிருந்து கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரிங்கிட்டுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மத்திய மண்டல சுங்கத்துறையின் உதவி தலைமை இயக்குனர் நோர்லிலா இஸ்மாயில் ( Norlela Ismail ) தெரிவித்தார். மத்திய கிழக்கு நாட்டிற்கு விமானத்தில் புறப்படவிருந்த அந்த ஆடவர் விமான நிலைய பாதுகாவலர்களின் ஒத்துழைப்போடு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார் . 60 வயது மதிக்கத்தக்க அந்த பேர்வழியின் பேக்கை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது அதில் 572,563 ரிங்கிட் மற்றும் 24,500 சிங்கப்பூர் டாலரும் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
வெளிநாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநர் என நம்பப்படும் அந்த ஆடவர் வைத்திருந்த பணம் குறித்து இன்னமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் 28 பி விதியின் கீழ் மற்றும் 2001ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட தொகையின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நோர்லிலா தெரிவித்தார். அந்த நபர் மலேசியாவிலிருந்து எடுத்துச் செல்லும் ரொக்க தொகையின் அளவை தெரிவிக்கத் தவறியுள்ளார் என்றும் அவர் கூறினார். மலேசிய ரிங்கிட்டை நாட்டிலிருந்து வெளியே கொண்டுச் செல்வதற்கு முன் மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.