கோலாலம்பூர், பிப் 23 – நாள்தோறும் 3 மில்லியன் லிட்டர் டீசல் நாட்டிலிருந்து கடத்தப்படுவதாகவும் இதனால் தினசரி 4.5 மில்லியன் ரிங்கிட் மலேசியாவுக்கு இழப்பு ஏற்படுவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் அர்மிசன் மோஹட் அலி தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியான் வர்த்தக மன்றம் வெளியிட்டுள்ள ஆய்வில் இந்த புள்ளிவிவரம் இடம்பெற்றுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு பெட்ரோல் நிலையங்கள், மொத்த வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் , கட்டுப்பாட்டு மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் 5,927 காண்காணிப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
மொத்தம் 14.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 64 லட்சத்து 41,118 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டன. டீசல் அல்லாத 41.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. டீசல் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக உள்நாட்டைச் சேர்ந்த 554 பேரும் , 112 வெளிநாட்டினரும் நிரந்தர குடியிருப்பு வாசிகளில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.