கோலாலம்பூர், பிப்ரவரி 14 – கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்ட விதிகள் குறித்து கேள்வி எழுப்பி தொடுத்திருந்த வழக்கை அடுத்து, வழக்கறிஞர் நிக் எலின் ஜூரினா நிக் அப்துல் ரஷீத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக நம்பப்படும் மூன்று சமூக ஊடக கணக்குகளின் உரிமையாளர்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.
அந்த கொலை மிரட்டல் தொடர்பில், இதுவரை மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ள வேளை ; அதில் ஒன்று மேல் நடவடிக்கைகாக அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையும், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜித் உறுதிப்படுத்தினார்.
கிளந்தான் ஷரியா சட்டத்தில் இடம்பெற்றுள்ள 18 விதிகளுக்கு சவால் விடுத்து மனு தாக்கல் செய்ததை அடுத்து, தமக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக, கடந்த சனிக்கிழமை வழக்கறிஞர் நிக் எலின் கூறியிருந்தார்.
அதற்கு முந்தைய நாள், கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள, 18 விதிகளில் 16, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறி, கூட்டரசு நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.