கோலாலம்பூர், நவம்பர் 28 – எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்காமல், தமது தலைமையிலான அரசாங்கம் கொடுங்கோல் ஆட்சி புரிவதாக கூறப்படுவதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
மக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்ந்து வழங்கப்படும் வேளை; பேச்சு வார்த்தை நடத்தப்படும் வரை எதிர்க்கட்சிகளுக்கான ஒதுக்கீடுகள் ஒருபோதும் வழங்கப்படாது என்றாரவர்.
பிரதமரை ஆதரித்தால் மட்டுமே நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் எனும் நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை. அவ்வாறு செய்வது கட்டாயமும் இல்லை.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ பட்டிலா யூசோபிடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை எனவும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க வந்துள்ளனர் என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சஹிடான் காசிம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.