கோலாலம்பூர், நவ 28 – மாட்சிமை தங்கிய பேரரசரை சிறுமைப்படுத்தியது மற்றும் பிரதமருக்கு மிரட்டல் விடுத்ததன் தொடர்பில் இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் ரஸாருதீன் உசேன் தெரிவித்திருக்கிறார். 34 மற்றும் 37 வயதுடைய அந்த ஆடவர்கள் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில்
ரஸாருதீன் குறிப்பிட்டார். “Cik Mat Cik Po” என்ற முகநூல் கணக்கின் உரிமையாளர் என நம்பப்படும் முதல் சந்தேகப் பேர்வழி நவம்பர் 26ஆம்தேதி கைது செய்யப்பட்டார்.
பேரரசருக்கு எதிராக நிந்தனை அம்சத்தைக் கொண்ட கருத்தை பதிவேற்றியதன் தொடர்பில் அந்த நபர் கிளாந்தான் , கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார். நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதால் நவம்பர் 30 ஆம்தேதிவரை அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
@Jaiadani89 என்ற டிக் டொக் கணக்கின் உரிமையாளரான இரண்டாவது சந்தேகப் பேர்வழி பிரதமர் அன்வாருக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததன் தொடர்பில் கிளந்தான் ,கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டதாக ரஸாருதீன் தெரிவித்தார்.