கோலாலம்பூர், நவ 28 – நாடு முழுவதிலும் நிரந்தர நிவாரண மையங்கள் உடனடியாக அமைக்கப்படவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். முன்னோடி திட்டத்தின் கீழ் ஒன்பது மாநிலங்களில் இந்த நிவாரண மையங்கள் அமைக்கப்படும் என பிரதமரின் கேள்வி நேரத்தின்போது இன்று நாடாளுமன்றத்தில் அன்வார் இதனை தெரிவித்தார். ஒவ்வொரு நிவாரண மையம் அமைப்பதற்கும் 5 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்பதோடு தற்காலிக துயர் துடைப்பு மையங்களைவிட நிரந்தர நிவாரண மையங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த வசதிகளை கொண்டிருக்கும் என நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நாம் வெள்ள பேரிடரை எதிர்நோக்குகிறோம். தற்காலிக நிவாரண மையங்கள் மட்டும் போதுமானதாக இல்லை. எனவேதான் நிரந்தரன நிவாரண மையங்களை அமைப்பது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். வெள்ள காலத்திற்கு பிறகு சமூக நடவடிக்கைக்கான இடங்களாகவும் அந்த நிரந்த மையங்கள் திகழமுடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.