![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-28-Jun-2024-08-39-AM-1582.jpg)
கோலாலம்பூர், ஜூன்-28, கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்தும் முயற்சியில் அத்தொகுதியின் முன்னாள் உறுப்பினர் அசிசி அபு நாயிம் (Azizi Abu Naim) தோல்விக் கண்டுள்ளார்.
இடைத்தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு (SPR) எதிராக இடைக்கால தடையுத்தரவு விதிக்கக் கோரி அவர் செய்திருந்த மனுவை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
SPR, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தன் கடமையைச் செய்கிறது.
எனவே, தேர்தலை நடத்த வேண்டாம் என SPR-ருக்கு நீதிமன்றம் உத்தரவு போட முடியாது என, நீதித்துறை ஆணையர் ரோஸ் மாவார் ரொசாய்ன் (Roz Mawar Rozain) தனது தீர்ப்பில் கூறினார்.
பெர்சாத்து கட்சியில் தனது உறுப்பியம் ரத்தாகி, அதை அடுத்து சட்டமன்றத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அசிசி இவ்வாரத் தொடக்கத்தில் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
கட்சி உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தாங்கள் வகிக்கும் மக்கள் பிரதிநிதி பொறுப்புகளையும் இயல்பாகவே இழப்பர் என பெர்சாத்து கட்சி தனது விதிகளைத் திருத்தியதை அடுத்து அசிசியின் பதவி பறிபோனது.
குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அசிசி, கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளித்ததால் பெர்சாத்து உறுப்பியத்தை இழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.
அந்த 6 பேரின் MP பதவி என்னவாகும் என்பதை மக்களவை சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.