![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-02-Jul-2024-04-24-PM-9000.jpg)
கோலாலம்பூர், ஜூலை-2, 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மலேசிய அணியின் அதிகாரப்பூர்வ உடை ஒருவழியாகப் ‘நெருப்பாய்’ புதுப்பொலிவுப் பெற்றுள்ளது.
முன்னதாக வெளியான வடிவமைப்புக் குறித்து பொது மக்கள், நெட்டிசன்கள் உள்ளிட்ட தரப்புகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கலவையானக் கருத்துகளைத் தொடர்ந்து, அம்மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் (MOM) தலைவர் தான் ஸ்ரீ மொஹமட் நோர்சா ஜக்காரியா (Mohamad Norza Zakaria) கூறினார்.
புதிய வடிவமைப்பானது, ஜேக்கேட்டின் முன்பக்கமும் பின்பக்கமும் தெளிவாகவும் பெரியதாகவும் இருக்கும் மஞ்சள் நிற புலிக் கோடுகளுடன் கருப்புப் பின்னணியைக் கொண்டுள்ளது.
முந்தைய வடிவமைப்பில் காட்டப்பட்ட தங்க நிற MOM சின்னத்துடன் ஒப்பிடும் போது, இப்புதிய வடிவமைப்பில் ஜாலோர் கெமிலாங் (Jalur Gemilang) கொடியுடன் அதன் அசல் நிறத்தில் MOM சின்னத்தையும் முன்னிலைப்படுத்தியுள்ளோம் என அவர் சொன்னார்.
2005-ஆம் ஆண்டு மணிலா சீ போட்டியில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மலேசிய அணியின் அடையாளமாக விளங்கும் புலி உணர்வை இப்புதிய வடிவமைப்பும் பிரதிபலிக்கிறது.
புலியின் வேகமும் வீரியமும் கலந்த உணர்வோடு பாரீஸ் நகரில் மலேசிய விளையாட்டாளர்களின் ‘பாய்ச்சல்’ இருக்கும் என நோர்சா நம்பிக்கைத் தெரிவித்தார்.
முன்னதாக வெளியான மலேசிய ஒலிம்பிக் உடைகள், என்றும் இல்லாத அளவுக்கு களையிழந்தும், உத்வேகம் இல்லாமலும் காட்சியளிப்பதாக நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின.
இளைஞர் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூட அதனை விமர்சனம் செய்திருந்தார்.