
சிங்கப்பூர், செப்டம்பர்-6,நேப்பாள பெரு வெள்ளத்தில் மாயமான சிங்கப்பூரியர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியா முதலீடுகள் தொடர்பாக, இணையத்தில் பரப்பப்பட்டு வரும் இனவெறி கருத்துக்களுக்குச் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.
சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் காணாமல் போன சிங்கப்பூர் பிரஜைகளை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இணையத்தில் சிலர் இனவெறி சார்ந்த தரக்குறைவான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல, ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளும் வணிக முதலீடுகள் தொடர்பாகவும், Temasek நிறுவனத்தின் தலைவர்கள் மீதும் இனரீதியிலானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ள அமைச்சர் சண்முகம், இந்த விவகாரத்தில் குற்றவியல் தொடர்புகள் உள்ளதா என விசாரணை நடத்தப் போலீஸை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், விதிகளை மீறிப் பதிவிடப்பட்டுள்ள இனவெறிக் கருத்துக்களை உடனடியாக அகற்றுமாறு இணையத் தளங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
வணிக ரீதியிலான முதலீட்டு முடிவுகள் முற்றிலும் தொழில்முறை திறனின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன; இதில் இனத்தைச் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இணையத்தில் சில சிறுபான்மையினர் பரப்பும் இந்த வெறுப்புணர்வு சிங்கப்பூரின் உண்மையான முகம் அல்ல எனக் கூறிய சண்முகம், நேப்பாள நிவாரணப் பணிகளுக்காகச் சிங்கப்பூர் மக்கள் சாதி மத பேதமின்றி 3 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கித் தங்களின் நற்பண்பை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் பன்முக கலாச்சாரத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.



