கோலாலம்பூர், மார்ச் 22 – கால நேரம் எதுவும் பார்க்காமல் வேலை செய்பவர்கள் தான் முன்களப் பணியாளர்கள்.
24 மணி நேரங்களும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்பதே அவர்கள் பார்க்கும் வேலையின் அடிப்படை தேவையாக இருக்கும்.
அந்த சமயங்களில், மகிழ்ச்சியோ அல்லது சோகமோ, சாதாரண மக்களைப் போல் நினைத்த நேரத்தில் அவற்றை அனுபவிக்கவோ, அனுசரிக்கவோ அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுவதில்லை.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இந்த புனித இரமலான் மாதத்தில் வைரலாகி நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.
நோன்புத் துறக்கும் சமயம் பார்த்து, தீயணைப்பு மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்திருக்கிறது.
கடமை தான் முக்கியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நோன்புத் துறக்க வைத்திருந்த பானங்களையும், பதார்த்தங்களையும் கையில் எடுத்துக் கொண்டு, சம்பவ இடம் விரைந்தனர்.
அதிலும் குறிப்பாக பெரிய ஜக்கில் ஐஸ்கட்டிகளுடன் உள்ள பானம் கீழே தழும்பா வண்ணம் அதனை ஒருவர் இறுகப் பிடித்திருப்பது வைரல் வீடியோவில் தெரிகிறது.
தீயணைப்பு வண்டி அவசரத்தில் குலுங்கிக் குலுங்கிச் சென்றப் போது, அவரின் கவனம் பன்மடங்கு அதிகரிப்பதும், அவரின் முக பாவணையும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்கிறது.
பணி முடிந்து சாலையோரத்திலேயே அவர்கள் நோன்புத் துறப்பது பார்ப்போரின் மனதை வருடுகிறது.
டிக் டோக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அவ்வீடியோ இதுவரை 15 லட்சம் பார்வைகளைப் பெற்றிக்கிறது.
தங்களின் பசியைப் பற்றி யோசிக்காமல், கடமைக்கு முன்னுரிமைக் கொடுக்கும் தீயணைப்பு வீரர்களும் அவர்களைப் போன்ற எல்லா முன் களப் பணியாளர்களுக்கும் மக்களாகிய நாம் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம் என பெரும்பாலான நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்