பெந்தோங், நவ 26 – பகாங், பெந்தோங்கில் நேற்றிரவு பல மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது. புக்கிட் திங்கி பகுதியில் தாழ்வான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான புகைப்படங்களும் காணொளி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகின.
பல வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதை அந்த காணொளியில் காண முடிந்தது. பாதிக்கப்பட்ட இடங்களை பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யூங் ஸ்யேபியூரா ஒத்மான் பார்வையிட்டதோடு தற்போது பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதோடு ஜன்டா பாய்கிற்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு மற்றும் பெரிய அளவில் மரங்கள் விழுந்ததால் அந்த சாலை தற்போது போக்குவரத்திற்கு மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.