
புத்ராஜெயா, மே-20-நாடாளுமன்றக் கலைப்புக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே எஞ்சியிருப்பதால், காலியாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டான் மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பண்டான் எம்.பி டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் செத்தியாவங்சா எம்.பி நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகி, தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் துறப்பதாக அறிவித்தனர்.
அவர்களின் கடிதம் கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய மக்களவை சபாநாயகர், தொகுதிகள் காலியானதாகவும் அறிவித்தார்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே இருக்கும் பட்சத்தில், அவசரத் தேவை இருந்தால் ஒழிய இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமில்லை.
எனவே, தற்போதைய சூழலில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், அடுத்த பொதுத்தேர்தல் வரை தற்போதைய நிலையே நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.



