கோலாலம்பூர், பிப்ரவரி 28 – பத்து பூத்தே மீதான உரிமையை மீட்டெடுப்பதற்கான சில விவகாரங்கள் தொடர்பில், சிங்கப்பூருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவும், சிங்கப்பூரும் பத்து பூத்தே உரிமையை கோரி வருகின்றன.
எனினும், தற்சமயம் அது தொடர்பில், எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, பிரதமர் துறையில், சட்ட மற்றும் சீர்திருத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் தெரிவித்தார்.
பத்து பூத்தே விவகாரம் தொடர்பில், இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை துரிதப்படுத்தப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அசலினா சொன்னார்.
பத்து பூத்தே கடல் எல்லையை நிர்ணயிக்கும் பேச்சு வார்த்தையை,
12 மாதங்களுக்குள் மேற்கொள்ளும் அணுகுமுறையை மலேசியா பின்பற்றி வருவதையும் அசலினா சுட்டிக்காட்டினார்.
மக்களவை கேள்வி பதில் நேரத்தில் போது, அசலினா அவ்விவரங்களை வெளியிட்டார்.