ஜோர்ஜ் டவுன், ஜனவரி 18 – பொறுப்பு இல்லாமல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக, தமக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை மறுத்து, 76 வயது டான் லியூக் லே எனும் பெண் ஒருவர் இன்று ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை கோரினார்.
ஆபத்தான முறையில் வேகமாக வாகனத்தை செலுத்தி, மோட்டார் சைக்கிளில் பயணமான 23 வயது முஹமட் அபிக் ரோஸ்ஜானி என்பரை மோதித் தள்ளியதாக டான் முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் 27-ஆம் தேதி, பிற்பகல் மணி 2.15 வாக்கில், ஜாலான் புக்கிட் கம்பீரில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், அதே நேரம், அதே இடத்தில், 40 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவரையும், அவரது 15 வயது மகனையும் மோதித் தள்ளியதாக, இராண்டாவது குற்றச்சாட்டையும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜோடி ஒன்றை மோதித் தள்ளியதாக மூன்றாவது குற்றச்சாட்டையும் டான் எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறையுடன், ஐயாயிரம் ரிங்கிட்டிலிருந்து 15 ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
15 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும், டான் இன்று விடுவிக்கப்பட்டார்.
இவ்வழக்கு விசாரணை மார்ச் எட்டாம் தேதி செவிமடுக்கப்படும்.