ஜோர்ஜ் டவுன், பிப் 2 – சுங்கை பெராய் ஆற்றில் நீர் குழாயில் ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து ஜனவரி 23ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்ட 120,000 பயனீட்டாளர்களுக்கான நீர் விநியோகம் வழக்க நிலைக்கு முழுமையாக திரும்பியதாக பினாங்கு நீர் விநியோக கழகத்தின் தலைமை அதிகாரி K. பத்மநாதன் தெரிவித்திருக்கிறார். திட்டமிட்டதற்கு 24 மணி நேரங்களுக்கு முன்னதாகவே சுங்கை பெராய் நீர் குழாயை பழுதுபார்க்கும் மாற்று திட்டம் முழுமையடைந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் முழுமையான நீர் விநியோக சேவையை பெற்றதாக அவர் கூறினார்.
சுங்கை பெராய்யை கடந்து செல்லும் அம்பாங் ஜாஜர் பாலத்தின் நெடுகிலும் 600 மில்லிமீட்டர் அளவிலான இரண்டு புதிய குழாய்கள் பொருத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்றதாக பத்மநாதன் தெரிவித்தார். சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பினாங்கிற்கு முழுமையாக நீர் விநியோகம் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.