ரெம்பாவ் , பிப் 2 – நாட்டில் ஊழல் நடைமுறைகளை அகற்றி நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மாட்சியை தங்கிய பேரரசர்சுல்தான் இப்ராஹிம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் ஆதரவளிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஊழலை எதிர்த்துப் போராடி மலேசியாவை மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்று அனைத்துத் தலைவர்களையும் அரசு ஊழியர்களையும் தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அன்வார் கூறினார். நேற்று காலையில் இஸ்தானா நெகாராவில் பேரரசரை சந்திக்கும் வாய்ப்பு தமக்கு வழங்கப்பட்டதாகவும் ஆட்சியை மேம்படுத்தவும், ஊழலில் இருந்து நாட்டை தூய்மைப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவரது மாட்சிமை ஆதரிக்கிறது என்று நெகிரி செம்பிலான் மாநில அளவில் ரெம்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அன்வார் கூறினார்.
தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணையாக ஏற்க வேண்டும். பிரதமர் அல்லது நிதியமைச்சரின் வெற்றியை எத்தனை பில்லியன் ரிங்கிட் குவிக்க முடியும் என்பதன் மூலம் அளவிடப்படக்கூடாது என்று அவர் கூறினார். அன்வார் தனது முதல் ஆண்டு நிர்வாகத்தில், நீதித்துறையின் முடிவுகளை அல்லது MACC மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை என்றும் கூறினார். MACC க்கு முழு அதிகாரம் வழங்குகிறேன். தனிநபரை கைது செய்யவோ அல்லது தனிநபரின் வீட்டைத் தேடவோ நான் அறிவுறுத்தல்களை வழங்கவில்லை. நாட்டைக் காப்பாற்ற, நாம் பெரிய மீன்களின் பின்னால் செல்ல வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.