ஜோர்ஜ் டவுன், பிப் 4 – பினாங்கு ரெப்பிட் பஸ் ஒன்று ஜலான் புர்மாவில் சேவையில் ஈடுபட்டடிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து அதிலிருந்த ஓட்டுனரும் பயணிகளும் அவசர அவசரமாக கீழே இறங்கியதால் காயமின்றி உயிர் தப்பினர். ஜலான் புர்மாவில் புலவ் திக்குசு போலீஸ் நிலையத்திற்கு அருகே நேற்று மாலை மணி 5.10 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பை பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்துசேர்ந்தபோது இயந்திரம் உட்பட பஸ்ஸின் பின்புற பகுதி தீயினால் மோசமாக பாதிக்கப்பட்டது. அந்த பஸ்ஸின் 50 விழுக்காடு பகுதி தீயில் அழிந்தது. பயணியை இறக்கி விடுவதற்காக பஸ்ஸை நிறுத்தியபோது இயந்திரப் பகுதியிலிருந்து புகை வருவதை அதன் ஓட்டுனர் கண்டறிந்துள்ளார். அதனை தொடர்ந்து அனைத்து பயணிகளும் பஸ்ஸிலிருந்து இறங்கும்படி பஸ் ஓட்டுனர் உத்தரவிட்டாதாக பினாங்கு ரெப்பிட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.