
அலோர் ஸ்டார், மே-11-பிறப்பின் போது ஏற்பட்ட மருத்துவ அலட்சியத்தால் மூளை பாதிப்புக்குள்ளான 9 வயது சிறுமிக்கு, சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு சுல்தானா பாஹியா மருத்துவமனையில் அந்தச் சிறுமி பிறந்தபோது, பிரசவத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சிக்கல்கள் காரணமாக அவருக்குக் கடுமையான மூளைப் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அந்தச் சிறுமி தனது அன்றாடத் தேவைகளுக்குப் பிறரைச் சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதையடுத்து 2022-ஆம் ஆண்டு 10 மருத்துவர்கள், ஒரு தாதி, சுல்தானா பஹியா மருத்துவமனை மற்றும் அரசாங்கம் ஆகியத் தரப்புகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை அவ்வழக்கைத் தொடுத்தார்.
இந்நிலையில் அரசாங்கத் தரப்புத் அதன் தவற்றை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி இழப்பீடு குறித்த தீர்ப்பை வழங்கினார்.
மொத்தமாக வழங்கப்பட்ட 2.54 மில்லியன் ரிங்கிட் தொகையில், எதிர்காலப் பராமரிப்புச் செலவுகள், சிகிச்சை மற்றும் இதர இழப்பீடுகளும் அடங்கும்.
இந்தத் தொகை சிறுமியின் பெற்றோர்களால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளை ஒன்றில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்றாலும், இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து அதிருப்தி தெரிவித்து அரசாங்கத் தரப்பும் சிறுமியின் தந்தையும் மேல்முறையீடு செய்துள்ளனர்.



