
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது.
மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு முக்கியம் என, அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அவ்விரு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான மோதல் மலேசியாவுக்கு ‘அப்பாற்பட்டது’; எனவே மத்தியஸ்தம் செய்கிறோம் என்ற பெயரில் அதில் மலேசியா தலையிடுவது அனாவசியம் என ஜூலாவ் எம்.பி Larry Sng கூறினார்.
ஆசியான் தலைமைப் பொறுப்பை திறம்பட செய்து முடிப்பதே ஒற்றுமை அரசாங்கத்தின் தலையாயப் பணியாக இருக்க வேண்டுமென்றார் அவர்.
ஏப்ரலில் நிகழ்ந்த ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்த நிலையில், பதற்றத்தைத் தணிக்க மலேசியா தயாராக இருப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் கூறியிருந்தார்.
இரு நாடுகளுடனும் மலேசியா அணுக்கமான உறவைக் கொண்டுள்ளதால், தெற்காசியாவில் அமைதி மலர உதவ முடியுமென அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
எனினும் கடந்த வாரம் மலேசியா வந்திருந்த இந்திய நாடாளுமன்ற பேராளர்கள் குழு, இந்தியா – பாகிஸ்தான் மோதல் அவ்விரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் அதில் மற்ற நாடுகளின் மத்தியஸ்தம் தேவையில்லை என்றும் தெளிவுப்படுத்தியது.
என்ற போதிலும், அன்வார் அவ்விரு நாடுகளிலும் பெரிதும் மதிக்கப்படுபவர் என்றும் எனவே அவர் மத்தியஸ்தம் செய்வதை வரவேற்பதாகவும், மலேசியாவுக்கான பாகிஸ்தான் தூதர் Syed Ahsan Raza Shah கூறியிருந்தார்.