
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18-சிலாங்கூர், கிள்ளானில் ஜோஹான் செத்தியா பகுதியில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (API) 157-ஆக ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.
இதனிடையே, நாடு முழுவதும் 64 கண்காணிப்பு நிலையங்களில் API குறியீடு மிதமான நிலையில் உள்ளது. அதேவேளை, கெடாவில் அலோர் ஸ்டார், லங்காவியிலும் பெர்லிஸ் மாநிலத்திலும் காற்றின் தரம் நல்ல நிலையில் இருக்கிறது.
காற்றின் தரக் குறியீட்டில் 0 முதல் 50 வரையிலான அளவுகள் ‘நல்ல’ நிலையையும், 51 முதல் 100 வரை ‘மிதமான’ நிலையையும், 101 முதல் 200 வரை ‘ஆரோக்கியமற்ற’ நிலையையும், 201 முதல் 300 வரை ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையையும் குறிக்கின்றன. 300-க்கு மேற்பட்ட அளவுகள் ‘ஆபத்தான’ நிலையாக வகைப்படுத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் உள்ள 68 காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்களிலிருந்து பெறப்படும் அக்குறியீட்டுத் தரவுகள் ஒவ்வொரு மணி நேரமும் வெளியிடப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக நிலவிய ஈரப்பதமான வானிலை, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சரவாக்கில் சில பகுதிகளில் புகைமூட்டத்தைச் சீராக்க உதவியதாக ஊடகங்கள் இதற்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன.
இருப்பினும், செப்டம்பர் இறுதி வரை தென்மேற்குப் பருவமழைக் காலம் நீடிப்பதாகவும் திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது கட்டுப்படுத்தப்படாவிட்டால் புகைமூட்ட அபாயம் தொடரும் எனவும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (MetMalaysia) தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Ani எச்சரித்துள்ளார்.



