பேராக், மார்ச் 4 – இவ்வாண்டிற்கான பள்ளி தவணை தொடங்குவதை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தலைமையில் “2024 மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
அவரது சேவை மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கு தலா 150 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
இம்மாணவர்கள் அனைவரும் புந்தோங் பகுதியைச் சுற்றியுள்ள 26 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள். இதனிடையே, இந்த உதவியைப் பெற்ற பெற்றோர்களும் மாணவர்களும் இது தங்கள் சுமையைக் குறைக்க உதவியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வேளையில், குழந்தைகளின் கல்விக்கு தான் எப்போதும் முன்னுரிமை அளிப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தெரிவித்திருக்கிறார்.
அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு இணங்க, பேராக் மாநில அரசும் அவ்வாறான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதவி தேவைப்படும் குழந்தைகளுக்குத் தகுந்த ஆதரவு வழங்குவதை உறுதிசெய்யும் அதே வேளையில், சமமான கல்வி வாய்ப்புகளைப் பெறுவதிலிருந்து யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் எனவும் துளசி மனோகரன் சுட்டிக்காட்டினார்.