புந்தோங், பிப்ரவரி 20 – புந்தோங் வாழ் மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு உதவும் வகையில், புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம் அவ்வப்போது நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
அவ்வகையில், இரண்டு பி40 குடும்பங்களிடம் இன்று நிதியுதவி ஒப்படைக்கப்பட்டது.
முதலாவது குடும்பம் தேனீக்கள் கொட்டியதால் அண்மையில் திடீரென காலமான 22 வயதே நிரம்பிய கெர்த்திகா சத்தியக்குமாரின் குடும்பமாகும்.
“ கெர்த்திகாவின் குடும்பத்தை நேரில் நான் சென்று நிதியுதவியை ஒப்படைத்தேன். அங்கு நிலவியச் சூழல் என்னை உள்ளபடியே சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியது. கெர்த்திகாவின் அகால மரணம் அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, புந்தோங் மக்களுக்கும், ஏன் பேராக் மாநிலத்துக்கும், நாட்டுக்குமே ஒரு இழப்பு” என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் கூறினார்.
“ சிறந்த கெட்டிக்காரியும் பொறுப்புணர்வுமிக்கவருமான பெண்ணை நாம் இழந்திருக்கிறோம். அதோடு, அடுத்த மாதம் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் அவர் மேற்படிப்பைத் தொடர வேண்டியவர். இப்படி நல்ல எதிர்காலம் மிக்க வருங்கால பட்டதாரியை நாம் இழந்து விட்டோம்” என துள்சி வேதனையுடன் சொன்னார்.
மகளை இழந்து வாடும் குடும்பத்து தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்தார்.
உதவியைப் பெற்ற இரண்டாவது குடும்பம் ஒரு சிறுவனும் பாட்டியும் ஆவர்.
தனியொருவராக பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தனது பேரன் கிரித்தரனை அவர் வளர்த்து வருகிறார்.
விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் கிரித்தரன், வாய்ப்பும் வசதியும் இருந்தால் அத்துறையில் சிறந்து விளங்கும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றான்.
அதனைக் கருத்தில் கொண்டு, அம்மாணவனுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் சட்டமன்ற உறுப்பினர் அவ்வுதவியைச் சேர்ப்பித்தார்.