கோலாலம்பூர், மார்ச் 25 – ஞாயிற்றுக் கிழமை மாலை 4.40 மணி வரைக்குமான தகவலின் படி, பெர்லிஸ், பேராக்கின் உலு பேராக், சபாவின் பியூஃபோர்ட் ஆகிய 3 பகுதிகளுக்கு வெப்ப அலையின் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 37-40 பாகை செல்சியல் வரையிலான வெப்ப நிலை பதிவாகும் பகுதிகளுக்கு, மலேசிய வானிலை ஆராய்சி மையம் Met Malaysia இந்த இரண்டாம் கட்ட எச்சரிக்கையை விடுத்து வருகிறது.
அதே சமயம் தீபகற்ப மலேசியாவில் 29 இடங்கள், சரவாக்கில் 3, சபாவில் 1 என மொத்தம் 33 இடங்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபகற்பத்தில் கெடாவில் மட்டும் 10 இடங்கள் முதல் கட்ட எச்சரிக்கையைப் பெற்றுள்ளன; அவை கோத்தா ஸ்டார், குபாங் பாசு, பெண்டாங், குவாலா மூடா, லங்காவி, சீக், பாலிங், கூலிம், போக்கோக் செனா மற்றும் பாடாங் தெராப் ஆகும்.
பேராக்கில் கிந்தா, குவாலா கங்சார், பாத்தாங் பாடாங், கம்பார் ஆகிய நான்கு இடங்களுக்கும், பஹாங்கில், பெரா, மாரான், தெமர்லோ, ரவூப் ஆகிய பகுதிகளுக்கும், ஜொகூரில் தங்காக், மூவார், பத்து பஹாட் மற்றும் செகாமாட்டுக்கும் முதல் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிளந்தானில் குவா மூசாங், குவாலா கிராய், ஜெலி, மற்றும் பாசீர் மாஸ், மலாக்காவில் அலோர் காஜா, ஜாசின், நெகிரி செம்பிலானில் ஜெம்போல் போன்ற இடங்களும் முதல் கட்ட எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டன.
சரவாக்கில் மூக்கா, தெலாங் உசான், லிம்பாங் ஆகிய மூன்று இடங்களுக்கும், சபாவில் கோத்தா பெலூட்டுக்கும் இந்த முதல் கட்ட எச்சரிக்கையை Met Malaysia விடுத்துள்ளது.
மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக 35 முதல் 37 பாகை செல்சியசுக்கு வெப்ப நிலை பதிவாகும் இடங்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்குப் பருவமழை, தீபகற்றப்பத்தின் வட பகுதியில் மார்ச் மாதக் கடைசியில் முடிவுக்கு வருவதோடு, எல் நினோ நிகழ்வின் தாக்கமும் தொடங்கியிருப்பதே இந்த அதிக வெப்ப நிலைக்குக் காரணமாகும்.