
காட்மண்டு, செப்டம்பர்-3,எங்களுக்கு நன்கொடை வேண்டாம். பேரழிவை ஏற்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய வெள்ளப்பெருக்குக்கு, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பருவநிலை இழப்பீடு தர வேண்டும் என நேப்பாளம் அதிரடியாக கூறியுள்ளது.
முன்னதாக, நேப்பாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக போதேகோஷி ஆற்றுப் படுகையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், மலேசியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய நேப்பாள வெளியுறவு அமைச்சர் Shisir Khanal, அந்நாட்டின் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் மிகக் குறைவு என்றாலும், பருவநிலை மாற்றத்தின் மிகக் கொடூரமான பாதிப்பை தாங்கள் அனுபவித்து வருவதாக ஏமாற்றத்துடன் கூறினார்.
பருவநிலை மாற்றத்துக்கு பெரும் பங்களிப்பு செய்த நாடுகள் எனும் முறையில் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா இந்த இழப்பீட்டு நிதி வழங்க கடமைபட்டுள்ளன என்றார் அவர்.
எனவே, இதை பேரிடருக்கு பிந்தைய நிதி உதவியாகப் பார்க்காமல், பருவநிலை நீதியாகவும் இழப்பீடாகவும் வழங்க அனைத்துலக நாடுகள் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நேப்பாள நிதி அமைச்சு இது தொடர்பான அதிகாரப்பூர்வ இழப்பீட்டுக் கோரிக்கை கடிதத்தை அதன் நட்பு நாடுகளுக்கும், ஐ.நாவின் இழப்பீட்டு நிதியத்திற்கும் அனுப்பியுள்ளது.



