கோலாலம்பூர், பிப் 25 – அம்பாங் ஜெயா, பண்டான் இன்டாவில் தங்களை போலீஸ்காரர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாட்டவர்களின் இல்லங்களில் புகுந்து கொள்ளையிட்டு வந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அங்கி அணிந்திருந்த அடையாளம் தெரியாத ஆறு ஆடவர்கள் தம்மிடம் கொள்ளையிட்டதாக வங்காளதேச ஆடவர் ஒருவரிடமிருந்து வியாழக்கிழமையன்று புகார் பெற்றதைத் தொடர்ந்து நால்வர் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கூறிய அந்த ஆடவர்கள் பெரிய அளவிலான கத்தரிக்கோல் மற்றும் சுத்தியல்களையும் வைத்திருந்தனர் என அந்த வங்காளதேசி தனது புகாரில் கூறியுள்ளார்.
அந்த அறுவரும் வீட்டின் உள்ளே நுழைவுந்தவுடன் அவ்வீட்டில் இருந்த இதர எழுவரையும் வரவேற்பறையில் அமரும்படி கூறினர். அவர்களை இருவர் கண்காணித்துக்கொண்டிருக்க இதர சந்தேகப் பேர்வழிகள் அவ்வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலும் பரிசோதித்து அங்கிருந்தவர்களின் நகைகள், ரொக்கம், கை தொலைபேசிகள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களையும் அபகரித்துச் சென்றனர். அந்த சந்தேகப் பேர்வழிகள் அவ்வீட்டிலிருந்து தங்களது வாகனத்தில் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஆசம் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் 30 மற்றும் 44 வயதுடைய நான்கு ஆடவர்களை கைது செய்தனர். அந்த ஆடவர்களிடமிருந்து 31 கைதொலைபேசிகள், போலீஸ் என்று எழுதப்பட்டிருந்த மேலங்கிகள், சுத்தியல் உட்பட பல்வேறு ஆயுதங்கள் , ரொக்கம் மற்றும் மூன்று கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.