செகாமாட், மார்ச்-22, காலுறை சர்ச்சையில் சிக்கியுள்ள KK Mart சூப்பர் மார்கெட்டுக்கு அடுத்த பேரிடியாக, ஜொகூர் செகாமாட்டில் உள்ள அதன் கிளைக் கடையொன்று அதிகாரிகளால் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்முறை, மதுபானங்களை மற்ற பானங்களிடம் இருந்து பிரித்து தனியே வைக்கத் தவறியதற்காக ஜெமந்தா KK Mart கிளை உடனடியாக செயல்பாட்டை நிறுத்த பணிக்கப்பட்டது.
நேற்று செகாமாட் நகராண்மைக் கழகம் MPS அங்கு மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது அக்கடையின் செயல் அம்பலமானது.
அச்சோதனையில் போலீஸ், செகாமாட் இஸ்லாமியத் துறை, உள்நாட்டு வாணிப- வாழ்க்கைச் செலவின அமைச்சின் செகாமாட் கிளையும் சேர்ந்துக் கொண்டன.
MPS-யின் அனுமதிப் பெறாத மதுபானங்கள் அக்கடையில் மறைத்து வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டு, 196 பாட்டில்கள் சீல் வைக்கப்பட்டன.
இவ்வேளையில் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் எதுவும் விற்பனைக்கு வைக்கப்பட்டதாகவோ, ஸ்டாக்கில் வைக்கப்பட்டிருந்ததாகவோ கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக KK Supermart உட்பட 80 பல்பொருள் விற்பனைத் தளங்களில் ஜொகூர் மாநில இஸ்லாமிய சமயத் துறை அதிரடிச் சோதனையை மேற்கொண்டது.
அதுவும், அனைத்து 10 மாவட்டங்களிலும் ஏக காலத்தில் அச்சோதனைகள் நடத்தப்பட்டன.
துணிக் கடைகள் மற்றும் எழுத்து உபகரணங்களை விற்கும் கடைகளை குறி வைத்து அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காலுறை சர்ச்சையை அடுத்து கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ஜொகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, அந்த மாபெம் சோதனை நடத்தப்பட்டது.