இங்கிலாந்து, டிச 28 – மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருளான மண்ணெண்ணெயை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.
எளிதில், அதிகம் கிடைக்கும் ஒரு கச்சாப்பொருளிலிருந்து எரிபொருள் ஒன்றை உருவாக்க விரும்பினோம். இதனிடையே மனிதக் கழிவுதான் எக்கச்சக்கமாகக் கிடைக்கிறதே, அதையே பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கும் எண்ணம் உருவானதாக கூறியுள்ளது இந்த ஆய்வின் மேற்கொண்டு வரும் ஃபயர்ஃபிளை கிரீன் பியூல்ஸ் ‘Firefly Green Fuels’ என்னும் நிறுவனம்.
மனிதக் கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட மண்ணெண்ணெயை பரிசோதித்தபோது, அது அப்படியே மண்ணெண்ணெயைப் போல செயல்பட்டதுமட்டுமல்லாமல், சாதாரண விமான எரிபொருளைவிட அது 90 சதவிகிதம் குறைவான கார்பன் வாயுக்களையும் வெளியேற்றியதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அந்த எரிபொருள், தற்போது விமான ஆய்வு மையங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு வெற்றிகரமானால், மனிதக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருள், விமான எரிபொருள் தேவையில் 5 சதவிகிதத்தை ஈடுகட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.