சிரம்பான், நவ 20 – தனது மனைவிக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு 540,000 ரிங்கிட் மதிப்புள்ள குத்தகைகளை வழங்கியதாக கூறப்படும் அரசு ஊழியர் ஒருவர் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிக்கு எதிராக தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் Syed Farid Syed Ali மூலம் MACC பெற்றது. அந்த அரசாங்க ஊழியர் தமது பதவியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமது மனைவியின் நிறுவனங்களுக்கு குத்தகைகளை வழங்கியதாக MACC யின் பிராகியூசன் அதிகாரி Zainab Yahaya நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமது துறையின் விநியோகம் மற்றும் சேவைகளுக்கான குத்தகைகளை மனைவியின் நிறுவனங்களுக்கு அந்த அரசு ஊழியர் வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். திங்கட்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக MACC அலுவலகத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டதோடு 2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 23 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.