கோலாலம்பூர், மார்ச் 28 – கோலாலம்பூர், Jalan U-Thantனிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடு ஒன்றை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இணைய மோசடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். இம்மாதம் 25ஆம் தேதி மாலை மணி 4.30 அளவில் அந்த ஆடம்பர அடுக்ககத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது அந்த கும்பலின் நடவடிக்கை கண்டுப்பிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார்.
அந்த அடுக்ககத்தில் வெளிநாட்டினர் இணைய சேவையை பயன்படுத்தி வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார்களை பெற்றதைத் தொடர்ந்து அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை, புத்ரா ஜெயாவிலுள்ள குடிநுழைவுத்துறையின் தலைமையகம் மற்றும் சிறப்பு வியூக அதிகாரிகள் உட்பட 36 பேர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 28 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் அறுவர் சீன பிரஜைகள் என்பதோடு எஞ்சியோர் வங்காளதேச பிரஜைகள் என Wan Mohammed கூறினார். அவர்களிடமிருந்து மடிக் கணினிகள், கை தொலைபேசிகள் மற்றும் 11 கடப்பிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.