அலோர் காஜா, மார்ச் 11 – மலாக்கா, அலோர் காஜாவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், விரைவுப் பேருந்து, டிரெய்லரின் பின்புறத்தை மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த எழுவர் காயமடைந்த வேளை ; அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாலை மணி 2.30 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில், பேருந்து ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்டிருந்த 41 வயது ஆடவர், உயிரிழந்து விட்டதை, மருத்துவ அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
அவ்வாடவர் செலுத்திய பேருந்து, ஜோகூர், லர்கினிலிருந்து, தலைநகர் TBS பேருந்து முனையத்திற்கு, 30 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.
அதே வழியில், கோத்தா திங்கியிலிருந்து, செனாவாங்கை நோக்கி பயணமான டிரெய்லரின் பின்புறத்தில் மோதி அந்த விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானது.
அவ்விபத்தை நேரில் கண்டவர்கள், போலீஸ் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.