
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-19-மலேசிய இந்தியர்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் பறைசாற்றும் நோக்கில், மலாயா பல்கலைக்கழகத்தில் ‘மலேசிய இந்திய வரலாறு’ போஸ்டர் விளக்கக்காட்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பண்டார் புத்ரி பூச்சோங் ம.இ.கா கிளையின் ஏற்பாட்டிலும், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஒத்துழைப்போடும் நடைபெற்ற இந்நிழ்ச்சி, இளைஞர்களின் அறிவுத்திறன், தலைமைத்துவம் மற்றும் தொடர்புத் திறனை மேம்படுத்தும் முக்கிய தளமாக அமைந்ததாக அதன் கிளைத் தலைவர் கேப்டன் ஜெய் கணேஷ் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த தனித்துவமான போட்டியில், 30 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் வரலாற்று ஆய்வுகளை போஸ்டர் மற்றும் கலந்துரையாடல்கள் வழி ஆவலுடன் சமர்ப்பித்தனர்.
இளைஞர்களின் மேம்பாட்டுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் ம.இகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் வழங்கி வரும் ஆதரவு, ம.இ.கா மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளதாக கேப்டன் ஜெய் கணேஷ் குறிப்பிட்டார்.



