மலேசிய காற்பந்து குழுவின் முன்னாள் விளையாட்டாளர் காலிட் அலி காலமானார்
கோலாலம்பூர், பி ப் 7 – மலேசியாவின் காற்பந்து குழுவின் முன்னாள் ஆட்டக்காரரான காலிட் அலி காலமானார். 66 வயதான காலிட் நீண்ட காலமாக நுரையீரல் புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த அவர் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு மலேசியா தகுதி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1977 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டுவரை காலிட் அலி சிலாங்கூர் குழுவிலும் விளையாடியுள்ளார். . சிலாங்கூர் காற்பந்து குழு நான்கு முறை அதாவது 1976,1978,1979 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் மலேசிய கிண்ணத்தை வெல்வதிலும் மத்தியதிடல் ஆட்டக்காரரான காலிட் அலி முக்கிய பங்காற்றியுள்ளார். 1979ஆம் ஆண்டு ஜகார்த்தா சீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலேசிய குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.
நேற்று மாலை மணி 3.05 அளவில் மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் காலிட் இறந்ததாக அவரது சகோதரரும் தேசிய காற்பந்து குழுவின் முன்னாள் முன்னணி ஆட்டக்காரருமான டத்தோ ஸைனல் அபிடின் ஹசான் தெரிவித்தார். இதனிடையே காலிட் அலியின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு மலேசியா தேர்வு பெறுவதற்கு மட்டுமின்றி பல அனைத்துலக காற்பந்து போட்டிகளில் மலேசியாவுக்கு சிறந்த அடைவு நிலை காண்பதற்கு பெரும் பங்காற்றிய அவரது சேவை என்றும் மறக்க முடியாத ஒன்று என அன்வார் தமது இரங்கலில் தெரிவித்துக் கொண்டார்.