
அம்பாங், ஜூன்-17-மலேசியாவின் நவீன மனநல மருத்துவத் துறையின் தந்தை என போற்றப்படும் மூத்த மனநல மருத்துவர் தான் ஸ்ரீ Dr எம். மகாதேவன், தமது 96-வது வயதில் காலமானார்.
இதய மற்றும் நுரையீரல் பாதிப்புகள் காரணமாக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு அம்பாங்கில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் வேண்டுகோளுக்கு இணங்க, 1967-ஆம் ஆண்டு அயர்லாந்திலிருந்து மலேசியா திரும்பிய Dr மகாதேவன், நாட்டின் மனநல மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
புகழ்பெற்ற உலு கிந்தா பஹாகியா மருத்துவமனையின் முதல் இயக்குநராகவும், மலேசிய மனநல மருத்துவ சங்கத்தின் நிறுவனராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 9.30 மணிக்கு அவரது இல்லத்தில் தொடங்கி, மதியம் 12 மணியளவில் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



