
கோலாலம்பூர், மே-20-காசாவுக்கு மனிதநேய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற GSF 2.0 கடல்வழிப் பயணத்தில், இஸ்ரேலிய கடற்படையினரால் மேலும் 4 மலேசியர்கள் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், இஸ்ரேலிய படைகளின் பிடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களின் எண்ணிக்கை தற்போது 29-தாக உயர்ந்துள்ளதாக ‘Sumud Nusantara கட்டளை மையம்’ (SNCC) உறுதிப்படுத்தியுள்ளது.
மனிதாபிமான உதவிகளுடன் சென்ற 10 கப்பல்களையும் இஸ்ரேலிய இராணுவம் அனைத்துலகக் கடல் பகுதியில் சட்டவிரோதமாக வழிமறித்து, இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட அனைத்துலகக் கடல் பாதையிலேயே இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள SNCC, இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த 29 மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தற்போதைய நிலவரம் குறித்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தது.
மலேசியத் தன்னார்வலர்கள் சிறப்பிடிக்கப்பட்டது குறித்து முன்னதாக கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.



